பாடாலூர், மார்ச் 26: ஆலத்தூர் தாலுகா கீழஉசேன் நகரத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ உசேன் நகரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்து அரியலூர்- ஆலத்தூர் கேட் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் குன்னம் போலீசார் மற்றும் கூத்தூர வருவாய் ஆய்வாளர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரியலூர்- ஆலத்தூர் கேட் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.